'கேக் வெட்றதுக்கே பட்டாக்கத்தியா?'.. பதறவைத்த பிரபல ரவுடியின் பிறந்த நாள் அலப்பறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | May 29, 2019 12:23 PM
பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடியால் கரூர் மக்களிடையே பெரும் பதற்றம் உண்டானது.

கரூர் தொழிற்பேட்டையை அடுத்த வெள்ளாளபட்டியைச் சேர்ந்தவர், 24 வயதான ரவுடி மணிகண்டன். இவர் மீது கரூரின் பசுபதிபாளையத்தில் உள்ள காவல்நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ரவுடி மணிகண்டன் அடுத்த வழக்குக்கு அச்சாரம் போட்டுள்ளார்.
அதன்படி, மணிகண்டனும் அவரது நண்பர்களும் கரூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் கூடியுள்ளனர். அங்கு மணிகண்டனுக்கு பிறந்த நாள் என்பதால், ஒரு கேக்கை வெட்டி கொண்டாட வேண்டும் என்று விரும்பியுள்ளனர். ஆனால் அப்போது நடந்ததுதான் விபரீதம்.
ஆம், ரவுடி மணிகண்டன் ஒரு நீண்ட பெரிய பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடியதோடு, நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளார். சிலரை மிரட்டவும் செய்துள்ளார். இந்த கொண்டாட்டத்தை அவரது நண்பர் ஒருவர் வீடியோவாக எடுக்க, இந்த வீடியோவைப் பார்த்த காவல்துறையினர் ரவுடி மணிகண்டனை கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பேசிய கரூர் புதிய எஸ்.பி.விக்ரமன், பொதுமக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்பவர்களைப் பற்றி தன்னிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
