"கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகல.." வீடு புகுந்த பெண்ணின் தந்தை.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், புது ஜோடிக்கு நேர்ந்த துயரம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தை அடுத்த வீரப்பட்டி சேவியர் காலனியை சேர்ந்தவர் மாணிக்க ராஜ். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த முத்து குட்டி என்பவரின் மகளான ரேஷ்மாவுக்கும், மாணிக்க ராஜூவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் ரேஷ்மாவின் தந்தையான முத்து குட்டிக்கும் தெரிய வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முத்து குட்டி மற்றும் குடும்பத்தினர், ரேஷ்மாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்த்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், காதலர்களான மாணிக்க ராஜ் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் தங்கள் ஊரில் இருந்து வெளியேறி, மதுரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கே திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, தங்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மீண்டும் தங்களின் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு மாணிக்க ராஜ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் வந்துள்ளனர். மேலும் தனது மகள் மற்றும் மாணிக்க ராஜ் ஆகியோர் சொந்த ஊருக்கு வந்த தகவல் தெரிந்த முத்து குட்டி, கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தனது மகள் ஓடிச் சென்றதால் ஊரார் முன்னால் அதிகம் அவமானங்களை எதிர் கொண்ட முத்து குட்டி, ரேஷ்மா மற்றும் மாணிக்க ராஜ் ஆகியோர் சொந்த ஊரில் இருப்பதை அறிந்து நேரடியாக அவரது வீட்டிற்கும் கோபத்துடன் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவர் மட்டுமே தனியாக வீட்டில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது அங்கே சென்ற முத்து குட்டி, தான் இருந்த உச்சகட்ட கோபத்தில் தனது மகள் என்றும் பாராமல் ரேஷ்மாவையும், அவரது கணவர் மாணிக்க ராஜையும், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும் தகவல்கள் கூறுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ரேஷ்மா மற்றும் மாணிக்கராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும் கொலை செய்த முத்து குட்டியையும் தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், முத்துக்குட்டியை போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
காதலித்து இருவரும் திருமணம் செய்த நிலையில், ஒரு மாதம் கூட ஆவதற்கு முன்பு, பெண்ணின் தந்தை செய்த சம்பவம், கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
