‘8 மாத கர்ப்பம்’!.. உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ‘நிறைமாத’ இளம் மருத்துவர்.. பரிதாபமாக பலியான சோகம்.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Madurai pregnant doctor Shanmugapriya died due to Covid-19 Madurai pregnant doctor Shanmugapriya died due to Covid-19](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/madurai-pregnant-doctor-shanmugapriya-died-due-to-covid-19.jpg)
மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சண்முகப்பிரியா (வயது 32) மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் வழக்கம்போல அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்துள்ளார். இதனிடையே டாக்டர் சண்முகப்பிரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த சில தினங்களாக ராஜாஜி அரசு மருத்துவமனையியில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணியாக இருந்ததால் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டாக்டர் சண்முகப்பிரியாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அதில், ‘மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்களப்பணி வீரராக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.
மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன். மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதல்வர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புப் பணியில் முன்களப்பணியாளராக செயல்பட்ட நிறைமாத மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)