'பிகில்' சிறப்புக்காட்சியை ரசிக்க.. திரண்ட ரசிகர்கள்.. 'போலி' கும்பலிடம் சிக்கி.. கடும் ஏமாற்றம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 25, 2019 11:20 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிளியோபட்ரா மற்றும் கே.எஸ்.பி.எஸ் கணபதி கலையரங்கம் ஆகிய இரு திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை காலை 4 மணி பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு அந்த மாவட்ட ரசிகர் மன்றத்தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் 600 ரசிகர்கள் மட்டுமே அமரும் வசதி கொண்ட திரையரங்கு வாசலில் 1000 ரசிகர்கள் கையில் டிக்கெட்டுடன் திரண்டதால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Bigil special show fake ticket controversy, police investigate

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரசிகர்களிடம் இருந்து டிக்கெட்டுகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமானோர் போலி டிக்கெட்டுடன் வந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தராஜ், அவரது உதவியாளர் மோகன்பாபு, போலி டிக்கெட்டுகளை அச்சடித்து கொடுத்த செல்வின், டிக்கெட்டை வடிவமைத்து கொடுத்த உமர்பாரூக் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சர்கார் படத்துக்கு 100 டிக்கெட்டுகள், விஸ்வாசம் படத்துக்கு 300 டிக்கெட்டுகள் அச்சடித்து விற்றதாகவும் அப்போது பெரிய அளவில் பிரச்சினைகள் எழவில்லை என்பதால் மீண்டும் இதுபோல செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #VIJAY