‘இதை மாத்துனாதான் வருவோம்?’.. திடீரென ‘கண்டிசன்’ போட்ட இலங்கை.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை கிரிக்கெட் அணி பிசிசிஐயிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சொதப்பல்
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்தியா தோல்வியடைந்தது.
இரு அணிகள் இந்தியா வருகை
இந்த சூழலில் வரும் பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. முதலில் வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பிப்ரவரி 6-ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்ததும், இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
பிசிசிஐயிடம் இலங்கை நிபந்தனை
இந்த நிலையில் இந்திய சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் இரு நிபந்தனை விடுத்துள்ளது. அதாவது, பிசிசிஐ முதலில் 2 டெஸ்ட், பின்னர் 3 டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டு மைதானங்களை ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் திடீரென முதலில் டி20 போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிசிசிஐயிடம் இலங்கை வாரியம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் டி20 தொடர்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 டி20 போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. பிப்ரவரி 20-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. பிசிசிஐ முதலில் டி20 தொடரை நடத்தினால் ஆஸ்திரேலியாவில் பபுளில் இருந்த இலங்கை வீரர்கள் நேரடியாக இந்தியாவுக்கு வந்துவிடுவார்கள். இது பயோ பபுள் பாதுகாப்பு சிரமங்களை குறைக்கும்.
பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும்?
மேலும் ஆஸ்திரேலியாவுடன் ஏற்கனவே டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு வருவதால், இலங்கைக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதனால் தான் டி20 தொடரை முதலில் வைக்க வேண்டும் என பிசிசிஐயிடம் இலங்கை அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிசிசிஐ விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
