CSK VS LSG: சிவம் துபே வீசிய 19-வது ஓவர் சர்ச்சை.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு கருத்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் இளம் வீரர் சிவம் துபேவை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் 1 ரன் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினார். இதனை தொடர்ந்து வந்த சிவம் துபேவும் அதிரடி காட்டினார்.
இதனைத் தொடர்ந்து வந்த அம்பட்டி ராயுடு (27 ரன்கள்), கேப்டன் ஜடேஜா (17 ரன்கள்), விக்கெட் கீப்பர் தோனி (19 ரன்கள்) எடுத்தனர் அதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை சென்னை அணி எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் டி காக் 61 ரன்களும், எவின் லூயிஸ் 55 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சிவம் துபேவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிவம் துபே பந்து வீசியது போல் யார் வீசினாலும் அதற்கு எதிரணி பேட்ஸ்மேனிடம் இருந்து நிச்சயம் இதுபோன்ற தண்டனை கிடைக்கும். ஒரு ஓவர் கூட வீசாதவரை திடீரென அழைத்து 19-வது ஓவரை வீச சொல்வதும் ஏற்புடையது அல்ல. சிவம் துபே வீசிய அந்த ஓவரில் ஒரு பந்துகூட சரியான லென்த்தில் வீசப்படவில்லை. ஈரமாக உள்ள ஆடுகளத்தில் அவர் வீசியது போன்ற பந்துவீச்சு முறை எடுபடாது. அவர் ஸ்லோவர் பந்துகள் வீசியிருந்தால் கூட சென்னை அணிக்கு கொஞ்சம் பயனளித்திருக்கும்’ என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இப்போட்டியில் கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் லக்னோ அணி இருந்தது. அப்போது 19-வது ஓவரை வீச ஆல்ரவுண்டர் சிவம் துபேவை கேப்டன் ஜடேஜா அழைத்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அப்போட்டியில் அதற்கு முன்பு வரை ஓவர் கூட அவர் வீசவில்லை. சிவம் துபே வீசிய அந்த ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் சென்றது. இதுதான் போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி சிஎஸ்கே அணி தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மற்ற செய்திகள்
