“ஏன் அந்த பையனுக்கு ஒரு மேட்ச்ல கூட வாய்ப்பு தரல?”.. ஒரு வழியாக கடைசி போட்டியில் விளக்கம் கொடுத்த கேப்டன் தோனி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கரேக்கருக்கு ஏன் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 68-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் மொயின் அலி 93 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஹால் மற்றும் ஓபேட் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜெய்ஷ்வால் 59 ரன்களும், அஸ்வின் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கரேக்கருக்கு நடப்பு ஐபிஎல் சீசனில் ஏன் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘ஹங்கரேக்கர் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை சிறப்பாக வீசுகிறார். ஆனாலும் அவர் இன்னும் அனுபவம் பெற வேண்டும். எங்கள் அணியின் இளம் வீரர்களை நன்றாக அனுபவமடைய வைத்து வாய்ப்புகளை வழங்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
தற்போது அணி வீரர்களுடன் இணைந்து ஹங்கரேக்கர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சரியான பயிற்சி மற்றும் அதிக அளவு உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல், ஐபிஎல் போன்ற தொடரில் பந்து வீச வைப்பது சரியாக இருக்காது. அவருக்கு நல்ல பயிற்சியும், அனுபவம் கிடைக்க விரும்புகிறோம். அதனால்தான் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை’ என தோனி விளக்கம் கொடுத்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், ராஜ்வர்தன் ஹங்கரேக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முக்கியமான கட்டத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பொறுப்பாக விளையாடி அசத்தினார். அதனால் ரூ. 1.50 கோடிக்கு சிஎஸ்கே அணி இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
