"அந்த பையனோட திறமைக்கு, 'ஆஹா, ஓஹோ'ன்னு பாராட்டி இருக்கணும்.. ஆனா, யாருமே கண்டுக்கல.." 'இளம்' வீரருக்காக ஆதங்கப்பட்ட 'சேவாக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | May 06, 2021 10:14 PM

14 ஆவது ஐபிஎல் சீசன், அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்தியாவில் ஆரம்பமான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த தொடர் திடீரென நிறுத்தப்பட்டது.

avesh khan is this season under the radar player says sehwag

கொல்கத்தா அணியில், இரண்டு வீரர்களுக்கு முதலில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதனைத் தொடர்ந்து, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி அணியைச் சேர்ந்த சிலருக்கும், கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

மீதமுள்ள போட்டிகள், கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்த பிறகோ, அல்லது வேறு ஏதேனும் நாட்டில் வைத்தோ நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த ஐபிஎல் சீசனில் பல இளம் வீரர்கள், அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

கெய்க்வாட், ஷாருக்கான், பிஷ்னாய், ஹர்ப்ரீத் பிரார், சேத்தன் சக்காரியா என பல இளம் வீரர்கள், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும், அனுபவமிக்க வீரர்களுக்கே அதிகம் அச்சுறுத்தலாக இருந்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் (Sehwag), இந்த சீசனில் பட்டையைக் கிளப்பிய இளம் வீரர் ஒருவரை பற்றி, யாருமே அதிகம் பேசவில்லை என கூறியுள்ளார். 'டெல்லி அணியில், ரபாடா, அஸ்வின், மிஸ்ரா, அக்சர் படேல் என பல பந்து வீச்சாளர்களை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால், அதே அணியிலுள்ள வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் (Avesh Khan) பற்றி யாருமே பேசவில்லை.

அவர் சத்தமே இல்லாமல், ஒவ்வொரு போட்டிகளிலும் 2 முதல் 3 விக்கெட்டுகள் வரை கைப்பற்றிச் சென்றார். அது மட்டுமில்லாமல், இந்த சீசனில், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களில் ஹர்ஷல் படேலுக்கு அடுத்தபடியாக, அவேஷ் கான் (14 விக்கெட்டுகள்) தான் இருக்கிறார்' என சேவாக் தெரிவித்துள்ளார்.

அதே போல, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பொம்மி ம்பாங்வாவும் (Pommie Mbangwa), அவேஷ் கான் பற்றி சில கருத்துக்ளைத் தெரிவித்துள்ளார்.

'அவேஷ் கான் குறித்து, அதிகம் பேச்சுகளோ, அல்லது ஏதேனும் எழுதப்பட்டோ நான் பார்க்கவில்லை. ஆனால், அவர் அது எதனைப் பற்றியும் சிந்திக்காமல், தன்னுடைய பணியைச் சிறப்பாக செய்து கொண்டே இருந்தார். ஆட்டத்தின் தொடக்கம், மிடில் மற்றும் இறுதி என அனைத்து நேரங்களிலும் அவேஷ் கான் சிறப்பாக பந்து வீசுகிறார்.

தேவையான நேரத்தில் பந்தின் வேகத்தை மாற்றுவது, யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசுவது என சிறப்பாக அவர் செயல்பட்டார்' என இளம் வீரருக்கு, பொம்மி ம்பாங்வா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில், எம்.எஸ். தோனி, டுபிளஸ்ஸிஸ், சூர்யகுமார் யாதவ், மில்லர், பேர்ஸ்டோ, விராட் கோலி, நிகோலஸ் பூரன் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை அவேஷ் கான் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Avesh khan is this season under the radar player says sehwag | Sports News.