"என்ன என்ன உணவுகளோ, மாமியார் வெச்ச விருந்தினிலே".. 125 உணவுகளுடன் வருங்கால மருமகனை மிரள வைத்த விருந்து!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇணையத்தில் அவ்வப்போது வைரலாகும் விஷயங்களை நாம் அறிய வரும் போது, அது மனதுக்கு மிகவும் நெருக்கமாக நம்மை ஒருவிதமாக நெகிழவும் வைக்கும்.

அந்த வகையில் ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.
பொதுவாக, பண்டிகை சமயங்களில் தங்களின் மருமகனுக்கு மாமியார் சார்பில் விருந்து கொடுக்கப்படுவது என்பது பல தரப்பு மக்களால் இயல்பாக நடத்தப்பட்டு வரும் ஒரு விஷயம் தான்.
ஆனால், அப்படிப்பட்ட விருந்தினை வேற லெவலுக்கு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாமியார் ஒருவர். ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜய நகரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா - சுப்புலட்சுமி தம்பதியின் மகன் சைதன்யா. இவருக்கும் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாச ராவ் - தனலட்சுமி ஆகியோரின் மகளான நிஹாரிகா என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சைதன்யா மற்றும் நிஹாரிகா ஆகியோருக்கு திருமணம் நடத்தவும் குடும்பத்தினர் நிச்சயம் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து வருங்கால மருமகனான சைதன்யாவுக்கு தசரா பண்டிகையை முன்னிட்டு விருந்து கொடுத்துள்ளார் நிஹாரிகாவின் தாயான தனலட்சுமி. அது மட்டுமில்லாமல், இதனை வழக்கம் போல ஒரு விருந்தாக மாற்றாமல், பிரம்மாண்ட விருந்தாகவும் ஏற்பாடு செய்துள்ளார் தனலட்சுமி. மொத்தம் 125 உணவு வகைகளை ஸ்பெஷல் விருந்தாகவும் அவர் ஏற்பாடு செய்திருந்துள்ளார். இதில் 95 வகையான உணவுகளை பிரத்யேகமாக ஆர்டர் செய்த மாமியார் தனலட்சுமி, மீதமுள்ள 30 உணவு வகைகளை வீட்டிலேயே தயார் செய்து விருந்தளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
உணவு, பலகாரம் என மொத்தம் 125 வெரைட்டிகளை பார்த்ததும் மருமகனான சைதன்யா ஒரு நிமிடம் மிரண்டே போனார். இதில், பல உணவு வகைகளை சைதன்யாவால் சாப்பிடவே முடியவில்லை என தகவல் தெரிவிக்கும் நிலையில், அதில் பலவற்றை தற்போது தான் கேள்விப்படுவதாகவும் சைதன்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்தும் சுவையாக இருந்ததாகவும் சைதன்யா தெரிவித்துள்ளார்.
மேஜை முழுக்க உணவு மற்றும் பலகாரம் என நிறைந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
