இளைஞருக்கு அடிச்ச ரூ.1 கோடி ஜாக்பாட்.. அடுத்த நாளே அவங்க அப்பாவுக்கு வந்த போன்கால்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகா மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக 1 கோடி ரூபாய் வென்ற இளைஞர் கடத்தப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

ஜாக்பாட்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கரீப் நவாஸ். ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவரான இவருக்கு அதன்மூலமாக சமீபத்தில் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனை தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடத்தில் கூறியுள்ளார் நவாஸ். இந்நிலையில், ஒருநாள் வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் கவலையடைந்திருக்கின்றனர். காவல்துறையில் புகார் அளிக்கலாம் என அவர்கள் முடிவு செய்த நிலையில் நவாஸின் தந்தைக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது.
மிரட்டல்
அந்த போன்காலில் எதிர்முறையில் பேசிய நபர் நவாஸை கடத்திவிட்டதாகவும், தங்களுக்கு ஒருகோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் எனவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நவாஸின் தந்தை ஒருகோடி ரூபாய் தன்னிடத்தில் இல்லை எனக் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கிறது. இறுதியில் 15 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அதற்கு நவாஸின் தந்தையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே, ஹூப்பள்ளி காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கிறார் நவாஸின் தந்தை. இதனையடுத்து பரபரப்பான காவல்துறையினர் நவாஸை கடத்தியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்திருக்கின்றனர்.
அதிர்ச்சி
இந்நிலையில், கடத்தல் கும்பலுக்கு சந்தேகம் வராததுபோல நவாஸின் தந்தை நடந்துகொண்டிருக்கிறார். அந்த இடைவெளியில் அதிரடியாக கடத்தல் கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அப்போதுதான் அந்த கடத்தலை நடத்தியவர்கள் நவாஸின் நண்பர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த கடத்தலில் ஈடுபட்ட முகமது ஆரிப், இம்ரான், அப்துல் கரீம், ஹுசைன் சாப், இம்ரான், டூஃபிப் மற்றும் முகமது ரசாக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளை ஹுப்பள்ளி - தர்வாட் போலீஸ் கமிஷனர் லாபுராம் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 இளைஞர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

மற்ற செய்திகள்
