தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக புதிதாக நியமிக்கப்பட்ட தனி அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என்.சேகர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விஷால் தலைமையிலான முன்னாள் நிர்வாகிகளால் வரும் 1.5.2019ம் தேதி நடத்துவதாக இருந்த தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ரத்தாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சங்க நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு தடை கோரி விஷால் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க தமிழக அரசு நியமித்த சிறப்பு அதிகாரியின் நியமனத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, சிறப்பு அதிகாரியின் நியமனம் தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.