''பழைய சீரியல்களை மறுஒளிப்பதிவு செய்வது போல், இதனையும் செய்யலாம்'' - பிரபல தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸினால் உயிரிழப்புகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, கொரோனா வைரஸ் காரணமாக வணிகம் உள்ளிட்டவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரைத்துறை பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் , ரிலீஸ் தேதி ஆகியவை பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பாக அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற டிஜிட்டல் பிளாட் பார்ம் நிறுவனங்களுக்கும் தாழ்மையான வேண்டுகோள்.

இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலையில், பழைய சீரியல்களை மறுஒளிபரப்புவதும், அதுபோல் ஏற்கெனவே திரையிடப்பட்ட திரைப்படங்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே திரையிடப்பட்ட நிறைய திரைப்படங்களின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமங்கள் இன்னும் விற்கபடாமல் இருக்கிறது. அந்த படங்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கும் ஒரு கன்டென்ட் கிடைக்கும். தயாரிப்பாளர்களின் பொருளாதார நெருக்கடியும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். அதுபோல் நிறைய திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமைகள் விற்கப்படாமல் இருக்கிறது. அவற்றையும் டிஜிட்டல் பிளாட் பார்ம் நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரிலீசுக்கு தயாரான திரைப்படங்கள் இந்த சூழ்நிலையில் வெளியிட முடியாமல் இருக்கின்றன. எப்போது இயல்பு நிலை திரும்பும், இனிமேல் திரைப்படங்களை எப்போது ரிலீஸ் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் சிறிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான திரைப்படங்களை நேரடியாக எக்ஸ்குளூசிவாக சேட்டிலைட்டிலேயோ அல்லது டிஜிட்டில் பிளாட் பார்ம் மூலமாகவோ ரிலீஸ் செய்வதற்கான சாத்யகூறுகள் நிறைய உள்ளது. அதற்கும் நீங்கள் வழிவகை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

Entertainment sub editor