பார்வை மாற்றுத்திறனுளிக்கு வாய்ப்பளித்த இமான்: நன்றி கடனாக கிராம மக்கள் செய்யும் கௌரவம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 28, 2019 01:05 PM
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற தந்தை - மகள் பாசத்தைக் கூறும் கண்ணான கண்ணே பாடலை திரையரங்கில் கண்ட ரசிகர்கள் பெரும்பாலானோர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

இந்த பாடலை பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் மிகுந்த வைரலானது. ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்த நிலையில், இவரின் முகவரி, தொடர்பு எண் பற்றி தெரிந்தால் சொல்லுமாறு இசையமைப்பாளர் டி.இமான் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை தொடர்புக் கொண்டு பேசியதாகவும், விரைவில் அவரை ஒரு பாடலுக்கு பயன்படுத்திக்கொள்வதாகவும், திருமூர்த்திக்கு மகிழ்ச்சியான் நாட்கள் காத்திருப்பதாகவும் டி.இமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே நொச்சிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வை மாற்றுத்திரனாளி இளைஞருக்கு டி.இமான் வாய்ப்பளித்ததையொட்டி, இமானை கவுரவிக்கும் விதமாக வீட்டிற்கு ஒரு மரமாக சுமார் 1000 மரக்கன்றுகள் நட அப்பகுதி கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் திருமூர்த்தியின் பேர் சொல்லும் விதமாக மரங்களை வளர்க்கும் பசுமை திட்டமாக இது இருக்கும் என பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியின் உறவினர் நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார். திருமூர்த்தி திரைப்படத்தில் பாடிய பிறகு அந்த பாட்டை டிரெண்ட் செய்து அவருக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்ட டி.இமானுக்காக இந்த கவுரவத்தை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
பார்வை மாற்றுத்திறனுளிக்கு வாய்ப்பளித்த இமான்: நன்றி கடனாக கிராம மக்கள் செய்யும் கௌரவம் வீடியோ