தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பிஆர்ஓ-ஆகவும், தல அஜித்குமாரின் மேனேஜராகவும் உள்ள சுரேஷ் சந்திரா தனது தாயின் உடல்நலம் குறித்து உருக்கமான பதிவை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் சந்திராவின் தாயார் சத்யா, தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனது தாயின் பிறந்தநாளான இன்று (ஜூன்.6), தனது தாயுடனான நினைவுகளை உணர்வுப்பூர்வமான பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், ‘ஆசிரியரான எனது தாய் முதுமையிலும் கற்பதை நிறுத்தவில்லை. மாணவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பெண்கள் ஒருவரை சார்ந்து வாழக் கூடாது என்ற பெண்ணியவாத எண்ணமும், திருமணத்திற்கு பிறகும் படிப்பதில் உள்ள அதீத ஆர்வத்தினால் இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாகவும், பக்தி பழமையானவராக இருந்தாலும் அவரது முற்போக்கான சிந்தனைகள் எனக்கு முரண்பாடகவே இருந்தது'.
'நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் என் அம்மா, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, பிரெஞ்ச், ஜெர்மன், படுகா, பார்சி ஆகிய மொழிகளில் சரளமாக உரையாடுவார். எனக்கு சுவாசம் தந்த இந்த மேகத்துக்கு இன்று(ஜூன்.6) பிறந்தநாள். அம்மாவின் உடல் நலிவுற்று இருக்கும் இந்த வேளை தூக்கமின்றி, மான் அமைதியின்றி தவிக்கிறோம். எனக்கு திருமண பந்தத்தின் மீது இருந்த அச்சமே மாமியார் மருமகள் உரசல் தான். அதை என் அம்மாவும், மனைவியும் எனக்கு தராததற்கு நன்றி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், அவர் நாடுவது என் மனைவியின் அருகாமையை தான்'.
'கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அம்மா குணமடைய வேண்டும் என பிரார்த்திக்க நினைக்கிறேன். காரியத்துக்காக கடவுளை வேண்டினால் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுளை வணங்க தகுதியானவர்கள் எனது தாய் நலம் பெற அவரது இஷ்ட தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.