சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘காப்பான்’ திரைப்படத்தின் கதை குறித்து நடிகர் சூர்யா ஃபேஸ்புக் பேட்டி ஒன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் மோகன்லால் இந்தியாவின் 3வது உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது பெற்றதையடுத்து, ஹைதராபாத்தில் இருக்கும் ஃபேஸ்புக் தலைமையகத்திற்கு சென்று சிறப்பு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் ஃபேஸ்புக் வீடியோ காலில் வந்த நடிகர் சூர்யா, ‘காப்பான்’ திரைப்படத்தின் கதை மற்றும் ரிலீஸ் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அவர் பேசுகையில், ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் சார் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக தானும் நடித்திருப்பதாக கூறினார்.
மோகன்லால் சாரின் நடிப்பு மிக அற்புதமாக இருந்தது, அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. முதல் காட்சியே அவரை பார்த்து சல்யூட் அடிப்பது தான் என கூறினார். மேலும், இப்படம் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சூர்யா தெரிவித்தார்.
சூர்யா நடிப்பில் செல்வராகவனின் என்.ஜி.கே, சுதா கொங்கராவின் சூர்யா 38 ஆகிய திரைப்படங்கள் வரிசையில் உள்ளன.