போர்ச்சுக்கலில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. உடனடியா அந்நாட்டு சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுலா சென்றிருந்த இந்திய பெண் மரணமடைந்த நிலையில். அதற்கு பொறுப்பேற்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

சோகம்
தென்மேற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு இந்தியாவை சேர்ந்த 37 வயது கர்ப்பிணி ஒருவர் சுற்றுலா சென்றிருக்கிறார். தலைநகர் லிஸ்பனில் அவர் இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் சாண்டா மரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு மகப்பேறியல் மையம் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து அவர் அருகில் உள்ள சாவோ சேவியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், துரதிருஷ்ட வசமாக ஆம்புலன்சில் பயணிக்கும்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கிறார்.
அவசர சிகிச்சை
இதனால், அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை சேவியர் மருத்துவமனையில் உள்ள சிசேரியன் மையத்தில் சேர்த்திருக்கின்றனர். துரிதகதியில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் பலனாக குழந்தை உயிர் பிழைத்திருக்கிறது. 722 கிராம் எடை இருந்த அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் ஆம்புலன்சில் மரணமடைந்தது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த செய்தி வெளியான சிலமணி நேரங்களில் கர்ப்பிணிகளுக்கான அவசர சிகிச்சை மையங்கள் மூடப்பட்டது குறித்து பொதுமக்கள் விமர்சித்து வந்தனர். இதனையடுத்து போர்ச்சுக்கல் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான மார்த்தா டெமிடோ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
மார்த்தா டெமிடோ
கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நாட்டின் தடுப்பூசி முகாம்களை திறம்பட நடத்தியவர் மார்த்தா. மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக மகப்பேறியல் மையங்களை தற்காலிகமாக அவர் மூடியது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், இந்திய பெண் மரணமடைந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, மார்த்தாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும், டெமிடோவின் சேவைக்கு நன்றி தெரிவித்ததாகவும், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்திருக்கிறார். இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
