“கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க கூடாது”.. தம்பதிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த சீனா.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் தம்பதிகள் தனித்தனியாக படுக்க வேண்டும் என்றும், முத்தமிட கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்பதற்காக சோதனை சாவடிகளில் பொருட்கள் கொண்டு வந்து டெலிவரி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியம் அல்லாத அனைத்து வர்த்தகங்களும் மூடப்படும் என்றும், பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சீன அரசின் பூஜ்ஜிய கொரோனா கொள்கையின்படி, இத்தகைய கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில், டிரோன்கள் மூலம் மக்களுக்கு அறிவிப்புகளை வெளியிடப்பட்டன. அதில், ‘ஷாங்காய் நகர மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உங்களது ஆத்ம விருப்பங்களை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. ஜன்னல்களை திறக்கவோ அல்லது பாட்டு பாடவோ செய்யாதீர்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
This is more funny. “From tonight, couple should sleep separately, don’t kiss, hug is not allowed, and eat separately. Thank you for your corporation! “ pic.twitter.com/ekDwLItm7x
— Wei Ren (@WR1111F) April 6, 2022
மற்றொரு வீடியோவில், ஷாங்காய் நகர தெருக்களில் சுகாதார பணியாளர்கள் ஒலிபெருக்கிகளை வைத்து கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதில், ‘இன்று முதல், தம்பதிகள் தனித்தனியாக படுக்க வேண்டும். முத்தமிட கூடாது. கட்டிப்பிடித்தலுக்கும் அனுமதி இல்லை. தனியாகவே சாப்பிடுங்கள். உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி’ என கூறுகின்றனர். இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
