"ஒன்னு அது இருக்கணும் இல்ல நாங்க இருக்கணும்.. டெய்லி இதே தொல்லையா இருக்கு".. சேவல் செய்த சேட்டை.. கோர்ட்டுக்கு போன வயசான தம்பதி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியை சேர்ந்த வயதான தம்பதி ஒன்று தங்களது அண்டை வீட்டில் வளர்க்கப்படும் சேவலால் பாதிக்கப்படுவதாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதற்கு அவர்கள் சொல்லிய காரணம் தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
![Case Filed against rooster by old couples in Germany Case Filed against rooster by old couples in Germany](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/case-filed-against-rooster-by-old-couples-in-germany.jpg)
பொதுவாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் கொடுக்கும் தொல்லையால் குடியிருப்பாளர்களிடையே சச்சரவுகள் வருவது வாடிக்கைதான். சில சமயங்களில் இது தீர்க்க முடியாத சிக்கலாகவும் மாறிவிடும். அப்படித்தான் நடந்திருக்கிறது ஜெர்மனியை சேர்ந்த வயதான தம்பதிக்கும். தங்களது அண்டை வீட்டில் வளர்க்கப்படும் சேவல் தினந்தோறும் கூவிக்கொண்டே இருப்பதாகவும் இது தங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் இந்த தம்பதியினர்.
சேவல்
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள Bad Salzuflen நகரத்தை சேர்ந்தவர் ஃபிரெட்ரிக் வில்ஹெல்ம் (வயது 70). இவரது மனைவி ஜுட்டா. இவர்களது வீட்டுக்கு அருகே வசித்துவருகிறார் மைக்கில். இவர் மாக்டா என்னும் சேவலை வளர்த்து வருகிறார். இந்த சேவல் தினந்தோறும் பகல் வேளைகளில் கூவிக்கொண்டே இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள் ஃபிரெட்ரிக் வில்ஹெல்ம் - ஜுட்டா தம்பதி. இதுபற்றி அவர்கள் மைக்கிலிடம் பேசியும் பலன் அளிக்கவில்லை என்பதால் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
இதுபற்றி பேசிய ஃபிரெட்ரிக்,"காலை 8 மணிவரையில் அந்த சேவல் அமைதியாகவே இருக்கிறது. அதன்பிறகு பகல் நேரத்தில் 100 முதல் 200 வரை சேவல் கூவுகிறது. இதனால் எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பகல் நேரத்தில் தோட்டத்தை பயன்படுத்த முடியவில்லை. இது ஒரு விதமான துன்புறுத்தல் ஆகும். இதனை சேவலின் உரிமையாளரிடம் எடுத்துக்கூறியம் பலன் அளிக்கவில்லை. ஏற்கனவே இந்த சேவலின் தொல்லை தாங்காமல் ஒரு குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டனர். ஆகவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்றார்.
இரைச்சல்
மேலும், அந்த சேவல் எழுப்பும் சத்தம் குறித்து ஆய்வில் ஈடுபட்ட இந்த தம்பதி புதிய தகவலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதன்படி மாக்டா சேவல் எழுப்பும் ஒலி 80 முதல் 95 டெசிபல் வரையில் இருப்பதாகவும் இது சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இணையான சத்தம் என்கிறார்கள் இந்த தம்பதியினர். இவர்களை போலவே அக்கம் பக்கத்தினரும் இந்த சேவல் குறித்து அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
இருப்பினும், இந்த சேவலின் உரிமையாளர் மைக்கில் தன்னுடைய தோட்டத்துக்கு இந்த சேவலின் தேவை இருப்பதாகவும் அதனால் சேவலை வைத்திருப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)