ஆஸ்கார் மேடையில் வில் ஸ்மித் செஞ்ச காரியம்.. திடீர்னு ட்ரெண்ட்-ஆன 16 வயதினிலே டெம்பிளேட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்று நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி பற்றி பேசிய கிறிஸ் ராக்கை அறைந்தார். இதனை அடுத்து, தமிழகத்தில் 16 வயதினிலே டெம்பிளேட் தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்கார்
திரைத்துறையில் அளிக்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று ஆஸ்கார். உலகம் முழுவதும் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து கலைஞர்களுக்கு விருது அளிக்கும் இந்த விழா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்கார் விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கோபமடைந்த ஸ்மித்
தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து பேசினார். இதனால் கோபமடைந்த ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கை பளார் என்று அறைந்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
16 வயதினிலே டெம்பிளேட்
கிறிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் அறைந்ததை தொடர்ந்து, 16 வயதினிலே படத்துடன் இந்த சம்பவத்தை ஒப்பிட்டு மீம்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 16 வயதினிலே படத்தில் நடிகர் கமல்ஹாசனின் உடல்மொழி குறித்து பலரும் அவரை 'சப்பாணி' என்று அழைப்பார்கள். 'இனி யாராவது உன்ன சப்பாணி-ன்னு கூப்பிட்டால் சப்புன்னு அறைஞ்சிடு' என ஸ்ரீதேவி சொல்வார்.
இதனை வில் ஸ்மித் உடன் பொருத்தி மீம்கள் சமூக வலை தளங்களில் உலா வருகின்றன. இதுகுறித்து ஊடகவியலாளர் பனிமலர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள பதிவில்,"உருவ கேலியை ஒருபோதும் யாரும் ஏற்றுக்கொள்ள கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்வது ஏற்றுகொள்ள இயலாத விஷயம். மேலும், குடும்ப அமைப்புகளுக்கு உள்ளேயும் உருவ கேலியை கணவனோ, மனைவியோ அனுமதிக்க கூடாது" என குறிப்பிட்டிருக்கிறார்.
நாகரீகம் தேவை
எழுத்தாளர் ஜானகிராமன் அவர்களின் மகளும் திரைத்துறை ஆய்வு எழுத்தாளருமான தீபா ஜானகிராமன் இதுகுறித்து பகிர்ந்திருக்கும் பதிவில்,"அது பொது மேடை. பலரது கனவுகளுக்கான இடம். ஒருவரை காயப்படுத்தவும் உரிமை இல்லை. அடிக்கவும் உரிமை இல்லை. வில் ஸ்மித் மற்றும் கிறிஸ் என இருதரப்பிலும் நாகரீகம் தேவைப்பட்டிருக்க வேண்டிய இடம் அது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக எழுத்தாளரான பொன் விமலா 16 வயதினிலே படத்தில் நடிகர் கமலஹாசனிடம் சொல்லும் 'இனி யாராவது உன்ன சப்பாணி-ன்னு கூப்பிட்டால் சப்புன்னு அறைஞ்சிடு' என்பதை குறிப்பிட்டு கீழே வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை தாக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
எழுத்தாளர் குட்டி ரேவதி தனது பேஸ்புக் பக்கத்தில், வில் ஸ்மித் செய்த செயலை குறிப்பிட்டு, "உண்மையான காதலும் அழகான ஆண்மையும்" என குறிப்பிட்டிருக்கிறார்.
தனது மனைவியை மற்றொருவர் தவறாக பேசும்போது வில் ஸ்மித் அடைந்த கோபத்தை பலர் கொண்டாடினாலும், பொது இடத்தில் வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதையும் அவர்கள் மறவாது சுட்டிக்காட்டியுள்ளனர்.

மற்ற செய்திகள்
