தென்காசியில் பரபரப்பு!.. வயல்களுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்... விவசாயிகள் அச்சம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
![thenkasi farmers panic as grasshoppers invade farm lands thenkasi farmers panic as grasshoppers invade farm lands](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/thenkasi-farmers-panic-as-grasshoppers-invade-farm-lands.jpg)
வெளிநாடுகளில் இருந்து வந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவில் மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை சேதப்படுத்தியது. தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான 10 ஏக்கர் விளை நிலத்தில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.
நேற்று இந்த விளை நிலங்களுக்குள் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்ததை கண்டு விவசாயிகள் அச்சம் அடைந்து நெல்லை வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு வந்த வேளாண்துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அசோக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் இதுகுறித்து கூறுகையில், 'இந்த வெட்டுக்கிளிகள் விவசாயப் பொருட்களை சேதப்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. இந்த வெட்டுக்கிளிகளை கண்டு விவசாயிகள் அச்சம் அடைய வேண்டாம். இவற்றை கோவை வேளாண் துறை பல்கலைக்கழக பூச்சியியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
அங்கு ஆய்வு செய்த பின்னர் வெட்டுக்கிளிகள் எந்த வகையை சேர்ந்தவை என்பது தெரியவரும். இத்தகைய வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மாலத்தியான் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற விகிதத்தில் கலந்து பயிர்களின் இலையில் நன்றாக படும் படி தெளிக்கலாம்' என்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)