'வேஷ்டி, சட்டையில் இருந்து'... 'புது உடையில் கலக்கும் முதல்வர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 29, 2019 05:20 PM

வேஷ்டி சட்டையில் இருந்து, புது உடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் லண்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

tamil nadu chief minister edappadi palanisamy signs agreements

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த புதன்கிழமையன்று லண்டன் சென்றடைந்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர். லண்டன் விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமிக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமையன்று கையெழுத்தானது. மலேரியா, டெங்கு போன்ற நோய்களை ஏற்படுத்தும், கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், மற்றும் தமிழகத்தில் அந்த நோய்களை கையாளும் வழிமுறைகளை பரஸ்பரம் அறிந்து கொள்ள ஏதுவாக, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும், 108 அவசர ஊர்தி சேவையை மேம்படுத்தும் விதமாக, இங்கிலாந்தின் 999 அவசர ஊர்தி சேவையை, முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார். அவருக்கு அதன் சிறப்பம்சங்கள் குறித்து, லண்டன் மருத்துவத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பின்னர் லண்டன் நகரில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை, தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தமும் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

Tags : #EDAPPADIKPALANISWAMI #LONDON