ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நேர்ந்த சோகம்.. ‘ஒருவர் பலி’.. இரவு சாப்பிட்ட உணவு காரணமா?.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 02, 2020 10:52 AM

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sriperumbudur family admitted in hospital for food poison

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது தங்கை முருகம்மாள், தம்பி அறிவுச்சுடர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு நேற்றிரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 4 பெண்கள், 3 ஆண்கள், ஒரு குழந்தை உட்பட 8 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 80 வயது முதாட்டி சொக்கம்மாளுக்கு உடல்நிலை மிகவும் மோசமானது.

இதனால் மேல்சிகிச்சைக்காக அவரை உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் இரவு கீரை சாதம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அவர்களது வாந்தி, மயக்கத்துக்கு காரணம் இரவு சாப்பிட்ட உணவா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.