'வரி' செலுத்தலன்னா 'குப்பைத் தொட்டி' தேடி வரும்... 'காரைக்குடி' நகராட்சி 'அதிரடி' நடவடிக்கை... இது என்ன புது 'ரூட்டா' இருக்கு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரி நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் முன்பாக, குப்பைத் தொட்டியை வைத்து காரைக்குடி நகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
![karaikudi municipal employees dump garbage to collect tax karaikudi municipal employees dump garbage to collect tax](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/karaikudi-municipal-employees-dump-garbage-to-collect-tax.jpg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி சார்பில், சொத்து, குடிநீர் உள்ளிட்ட நிலுவை வரிகள் வசூலிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரி நிலுவைத் தொகை வைத்திருப்போரிடம் வசூல் செய்ய சில நேரங்களில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிக நிலுவை வைத்திருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வரி வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
வரி நிலுவைத் தொகை வைத்திருக்கும் அலுவலகங்களை எல்லாம் கணக்கெடுத்து, ஒவ்வொரு அலுவலகம் முன்பும் குப்பைத்தொட்டிகள் வைத்து அதில் துர்நாற்றம் வீசும் குப்பைகளை தினமும் ஊழியர்கள் வந்து கொட்டிச் செல்கின்றனர். இதன் மூலம் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வரி நிலுவைத் தொகையை வசூலிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ஐ.சி.ஐ.சி வங்கி, மத்திய அரசு பி.எஸ்.என்.எல் அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்பு, தனியார் பள்ளி என வரி நிலுவை தொகையை வசூலிப்பதற்காக கேட் முன்பு குப்பை தொட்டியை நகராட்சி ஊழியர்கள் வைத்து அதில் குப்பையை கொட்டி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)