மீனாட்சி அகாடமி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக் கூடத்தின் (MAHER) 16 வது பட்டமளிப்பு விழா
முகப்பு > செய்திகள் > தமிழகம்மீனாட்சி அகாடமி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக் கூடத்தின் (MAHER) 16வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதன் மூலம் 1058 மாணவ மாணவிகள் பட்டதாரிகளாக சமுதாயத்தில் தடம் பதிக்கின்றனர்.

காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்விக்கூடத்தில் மேக்னிபிசன்ட் அரங்கில் MAHER ன் 16 வது பட்டமளிப்பு விழா, டிசம்பர் 23, 2022 அன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, விழா நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, அண்மையில் மறைந்த MAHER-ன் நிறுவனரும் வேந்தருமான A.N.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
MAHER-ன் கௌரவ இடைக்கால வேந்தர் கோமதி ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து துடிப்பு மிக்க பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் D.சாந்தாராம் M.D.,D.Diab., தலைமை விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.
MAHER-ன் நிர்வாக வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். அவர் தமது உரையில், “இந்த சிறப்பு மிக்க நாட்டின் இளையஞர்களுக்கும் இளைஞியருக்கும் அவர்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ற, உகந்த, நவீன யுக கல்வியை அளிக்க வேண்டும் என்கிற பெரும் குறிக்கோளுடன் 2004 ஆம் ஆண்டு MAHER தொடங்கப்பட்டது. MAHER-ன் அந்த தொலைநோக்கு கனவு இப்பொழுது நிறைவேறி உள்ளது!” என்றே கூற வேண்டும் என்று கூறினார்.
MAHER-ன் ஆண்டு அறிக்கையை துணை வேந்தர் டாக்டர் R.S.நீலகண்டன் சமர்ப்பித்தார். அவர் பேசுகையில், இந்த 16 வது பட்டமளிப்பு விழாவில், இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் 25 முனைவர் படிப்பு படித்தவர்கள் உள்ளிட்ட 1058 மாணவமணிகள் பட்டம் பெற்று சமுதாயத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானத்தில் இங்கு கட்டமைப்பு வசதிகளும் ஆய்வக சாதனங்களும் புதிதாக ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
MAHER-ன் பதிவாளர் பேராசிரியை டாக்டர் C.கிருத்திகா, தலைமை விருந்தினர் பேராசிரியர் டாக்டர் D.சாந்தாராம் M.D.,D.Diab பற்றி அவையினருக்கு அறிமுகம் செய்து உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். தலைமை விருந்தினர் பேராசிரியர் டாக்டர் D.சாந்தாராம் M.D.,D.Diab, MAHER-ன் அங்கங்களாக உள்ள கல்லூரிகளின் மகத்தான செயல்பாடுகளைப் பாராட்டியதுடன் அவை பெற்ற பல்வேறு விருதுகள்/அங்கீகாரங்கள் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். அவர், புதிதாக பட்டம் பெற்றவர்கள் தங்கள் உத்யோக வாழ்வில் சேவை உணர்வுடன் பணியாற்றி உயரங்களைத் தொட வேண்டும் என்று வாழ்த்தினார்.
பல்வேறு படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிறகு, கல்வியில் சாதனை படைத்த 75 நபர்களுக்கு இந்நிகழ்வில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. MAHER-ன் தலைசிறந்து விளங்கிய ஒன்பது முன்னாள் மாணவர்களுக்கு கோமதி ராதாகிருஷ்ணன் பெயரிலான சிறப்பு அலும்னி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில், டாக்டர் பாஷி V.வேலாயுதம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, அன்னார் இதய நோய் அறுவை சிகிச்சை துறையில் ஆற்றிய மகத்தான பணியைப் போற்றும் வகையிலான DSc Honoris Causa என்கிற உயரிய கல்வி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
நிர்வாக வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பெயரிலான மகத்தான மனித குல சேவை விருதை, அடித்தட்டு மக்களுக்கு தன்னலமற்ற சேவை புரிந்து வரும் பாலம் கல்யாணசுந்தரம் பெற்றார். நிகழ்ச்சியின் முடிவில் பட்டமளிப்பு விழா முடிந்ததாக இடைக்கால வேந்தர் அறிவித்தார். அதன் பின்னர், நாட்டுப் பண்ணுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.

மற்ற செய்திகள்
