‘கவனக்குறைவுக்கும், கவலையில்லாம விளையாடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு’!.. இளம்வீரரை சரமாரியாக தாக்கிய கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரிஷப் பந்த் ஆடிய விதம் குறித்து சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. மொத்தம் 5 நாட்கள் கொண்ட இப்போட்டியில், 2 நாள் மழையால் கைவிடப்பட்டது. இதனால் ரிசர்வ்டே எனப்படும் 6-வது நாள் போட்டி நடைபெற்றது.
அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து துணைக்கேப்டன் ரஹானேவும் வந்த வேகத்தில் அவுட்டானார். அதனால் ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்த வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணி இருந்தது.
அப்போது களமிறங்கிய ரிஷப் பந்த், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் வந்த உடனேயே அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் ஆரம்பத்திலேயே டிம் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக பார்த்தார். ஆனால் அந்த கேட்சை அவர் தவறவிட்டதால், ரிஷப் பந்த் அவுட்டில் இருந்து தப்பினார். ஆனால் மீண்டும் அதேபோல் ஒரு அதிரடி ஷாட் ஆட முயன்று தனது விக்கெட்டை ரிஷப் பந்த் பறிகொடுத்தார். இதனால் அப்போது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்துக்கு அவர் ஆளானார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரிஷப் பந்தின் பேட்டிங் குறித்து காட்டமாக பேசியுள்ளார். அதில், ‘ரிஷப் பந்த் தன்னுடைய ஷாட் தேர்வில் எப்போதுமே சொதப்பி வருகிறார். கவலையில்லாமல் விளையாடுவதற்கும், கவனக்குறைவாக விளையாடுவதற்கும் இடையில் சிறு வித்தியாசம்தான் உள்ளது.
இந்த போட்டியில் ரிஷப் பந்த் அந்த இரண்டையுமே கடந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்திலேயே ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி பொறுப்பாக ஆடாமல், அதை தவறவிட்டுள்ளார்’ என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்களும் ரிஷப் பந்த் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
