"தோனி தான் அதுக்கு காரணம்ன்னா.. நாங்க 10 பேரும்.. லெஸி குடிக்கவா போனோம்".. கடுப்பான ஹர்பஜன் .. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த ஹர்பஜன் சிங், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, சர்வதேச அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கெடுத்து வந்த அவர், கடைசியாக கொல்கத்தா அணிக்காக ஆடி இருந்தார்.
பின்னர், தன்னுடைய ஓய்வினை அறிவித்த பிறகு, பிசிசிஐ பற்றி வெளிப்படையாக ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்த சில கருத்துக்கள், அதிகம் பரபரப்பினை உண்டு பண்ணி இருந்தது.
இரண்டு உலக கோப்பைகள்
முன்னதாக, இந்திய அணி 2007 டி 20 உலக கோப்பையை வென்ற போதும், அதற்கடுத்து 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி இருந்த போதும், இரண்டு தொடர்களிலும் இடம்பிடித்திருந்த ஹர்பஜன் சிங், இந்திய அணிக்காக முக்கிய பங்காற்றி இருந்தார். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையின் இறுதி போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்து, போட்டியை கேப்டன் தோனி முடித்து வைத்ததை எந்தவொரு இந்தியராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடர்பாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இறுதி போட்டியில், சேவாக் மற்றும் சச்சின் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு, கம்பீர், கோலி மற்றும் தோனி ஆகியோர் ரன் சேர்த்து, கோப்பையைக் கைப்பற்ற உதவி இருந்தனர்.
தோனி மட்டும் தான் காரணமா?
இந்த தொடர் முழுக்க, சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் உள்ளிட்ட பலரும் சிறந்த முறையில் இந்திய அணிக்காக செயல்பட்டிருந்தனர். ஆனால், தோனியை மட்டும் உலக கோப்பை வென்றதன் காரணமாக குறிப்பிடுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி ஒன்றின் முன்பு லைவ் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த ஹர்பஜன் சிங், "ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை கைப்பற்றினால், ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்றது என குறிப்பிடுவார்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய போது, அனைவரும் எம்.எஸ். தோனி உலக கோப்பையை வென்றதாக குறிப்பிட்டார்கள்.
அப்படி என்றால், மீதமுள்ள 10 பேரும் லஸ்ஸி குடிக்க சென்று விட்டார்களா?. மற்ற 10 பேரும் என்ன செய்தார்கள்?. கவுதம் கம்பீர் என்ன செய்தார்?. மற்றவர்கள் என்ன செய்தார்கள்?. இது ஒரு அணியின் விளையாட்டு. 7 முதல் 8 வீரர்கள் நன்றாக ஆடினால் தான் உங்களின் அணி முன்னேறும்" என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
