"நீங்க வாங்குன டிகிரி எல்லாம் வெறும் பேப்பர்".. மெட்ரோ ரயிலில் கீழே உட்கார்ந்து பயணித்த தாய்.. வைரல் கேப்ஷனுடன் ஐஏஎஸ் ஆபிசர் பகிர்ந்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநெரிசலான மெட்ரோ ரயிலில் தனது குழந்தையுடன் கீழே அமர்ந்து பயணிக்கும் தாய் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளில் வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தையுடன் பயணிக்கும் நபர்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவுவதை பலரும் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். இருப்பினும் சிலர், அவ்வாறு செய்வதில்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
வைரல் வீடியோ
தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், நெரிசலான மெட்ரோ ரயிலில் மடியில் குழந்தையுடன் ஒரு தாய் கீழே அமர்ந்திருக்கிறார். இருக்கைகளில் பயணிகள் அமர்ந்திருந்தாலும் யாரும் அந்த தாய்க்கு இருக்கை கொடுக்க முன்வரவில்லை. அதனால் தனது மடியில் குழந்தையை கிடத்தியபடி கீழே அமர்ந்தபடி பயணிக்கிறார் அவர். பெண் பயணிகள் அதிகளவில் இருக்கைகளில் அமர்ந்திருந்த போதும், அந்த பெண்மணி குழந்தையுடன் கீழே அமர்ந்திருப்பது குறித்து பலரும் சமூக வலை தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
வெறும் பேப்பர்
இந்த வீடியோவை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில்," நீங்கள் வாங்கிய பட்டங்கள் உங்களது நடத்தையில் பிரதிபலிக்கவில்லை என்றால் அவை வெறும் காகித துண்டு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரையில் 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்த பதிவில் ஒருவர்,"உங்களோடு என்னால் உடன்பட முடியாது சார். ஒரு சமூகமாக, நாம் படிப்படியாக மற்றவர்களின் வலி மற்றும் துன்பங்களுக்கு உணர்ச்சியற்றவர்களாகி வருகிறோம். நான் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தேன், ஒவ்வொரு முறையும் ஒரு வயதான நபர் அல்லது ஒரு பெண் ஒரு சிறு குழந்தையுடன் நெரிசலான பேருந்தில் ஏறும்போது, நாங்கள் எங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறுவது வழக்கம்" என்று கமெண்ட் செய்துள்ளார். அதேபோல, "மனிதபிமானம் தேவை" என்றும் சக மனிதர்களின் மீது அன்போடு பழகவேண்டும்" என்றும் நெட்டிசன்கள் கமெண்டாக போட்டு வருகின்றனர்.
आपकी डिग्री सिर्फ़ एक काग़ज़ का टुकड़ा है, अगर वो आपके व्यवहार में ना दिखे. pic.twitter.com/ZbVFn4EeAX
— Awanish Sharan (@AwanishSharan) June 18, 2022

மற்ற செய்திகள்
