'நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை'... ‘இந்தியாவில் மே மாதத்தில் தொடங்கப்படலாம்’... ‘வெளியான தகவல்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 28, 2020 11:38 AM

நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனை, இந்தியாவில் மே மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

starting trials in India for corona vaccine over the next 2-3 weeks

கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், அதற்கு தடுப்பூசியோ, குணப்படுத்த மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் செயல்படும், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா', இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஆதிர் பூனேவாலா கூறியதாவது: ‘கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில், சர்வதேச அளவில், ஏழு மிகப் பெரிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. அதில், சீரம் நிறுவனமும் ஒன்று. ஒரு வாரத்திற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றியதால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி பரிசோதனை முடியும்வரை காத்திருக்கப்போவதில்லை.

தற்போதைய நிலையில், சில நூறு கொரோனா நோயாளிகளை வைத்து பரிசோதனைகள் அடுத்த மாதத்தில் தொடங்கப்படும். இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த மூன்று வாரங்களுக்குள், தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் துவங்கப்படும். வரும், செப்டம்பர் அல்லது அக்டோபரில், இந்த தடுப்பூசிகள் இந்தியாவில் ரூ. 1,000-க்கு விற்பனைக்கு வரும். முதல் கட்டமாக, முதல் ஆறு மாதங்களுக்கு மாதத்துக்கு, 40 முதல் 50 லட்சம் தடுப்பூசிகளும் தயாரிக்க உள்ளோம்.

அதன்பிறகு, மாதத்துக்கு, ஒரு கோடி தடுப்பூசியும் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த மருந்துக்கு, நாங்கள் காப்புரிமை கோர மாட்டோம். அனைத்து நாடுகளுக்கும், மருந்து கிடைக்கும் வகையில், சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வோம். இந்தியாவில், புனேயில் உள்ள எங்களுடைய ஆலையிலேயே, இந்த மருந்தை தயாரிப்போம். கொரோனா தடுப்பூசிக் கென தனி ஆலை, மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்’ என்று அவர் கூறினார். ஏற்கனவே, ஆக்ஸ்போர்டின் தடுப்பூசியின் மனித சோதனை, உலகெங்கிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.