தமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயகக்விருக்கும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலை நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’, ‘குரு’, ‘ராவணன்’ ஆகிய திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராய் பணியாற்றியுள்ளார். தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக்கப்படவுள்ள திரைப்படத்தில் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகவிருப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சிவப்பு கம்பள வரவேற்பில் ராஜநடை போட்ட ஐஸ்வர்யா ராய், அதையடுத்து அளித்த பேட்டி ஒன்றில், மீண்டும் எனது குரு மணிரத்னம் உடன் பணியாற்றவிருப்பதில் மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளதாக தெரிவித்தார்.
10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அரசனாகி ஆட்சி அமைப்பது பற்றிய பொன்னியின் செல்வன் கதையில், சோழ ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் இருக்கக் கூடிய முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நாவல்படி, நந்தினி என்பவள், மற்ற அனைத்து கதாபாத்திரங்களை விட மிகவும் தனித்துவமாக இருக்கும் தன்மை கொண்டவள். அமைதியாகவும் பரபரப்பின்றியும் காணப்படும் அவள் முகம் அன்பை மட்டுமே வழங்கும் விதமாக பிராகசிக்கும். ஆனால் அவள் பின்னணியில் சோழ அரசை நாசமுறச் செய்யும் வஞ்சனை இருப்பது யாருக்கும் தெரியாது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் ‘பொன்னியன் செல்வன்’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.