இயக்குனரும், 90ஸ் கிட்ஸ் Favourite மர்ம தேசம், ஜீ பூம்பா சீரியல் நடிகருமான லோகேஷ் சோக முடிவு..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனரும் நடிகருமான லோகேஷ் ராஜேந்திரன் இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொடர்களில் ஒன்றான மர்ம தேசம் தொடரில் ராசு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற லோகேஷ் ராஜேந்திரன், ஜி பூம்பா என்ற இன்னொரு புகழ்பெற்ற தொடரிலும் நடித்துள்ளார்.
மர்ம தேசம் விடாது கருப்பு என்ற இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சன் டிவி மற்றும் ராஜ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி இப்போதும் பல ரசிகர்களை இந்த தொடர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மறு ஒளிபரப்பிலும் இந்த தொடர் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜயகாந்த் நடித்த கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் லோகேஷ் ராஜேந்திரன் நடித்துள்ளார். லோகேஷ் ராஜேந்திரன், இயக்குனராக 6 அத்தியாயம் என்ற ஆந்தாலஜியில் சூப் பாய் சுப்பிரமணி என்ற ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் ராஜேந்திரன் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லோகேஷ் ராஜேந்திரன் மறைவு திரையுலகில் சோகத்தையும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் ராஜேந்திரனின் நெருங்கிய நண்பர்கள் இது தொடர்பான பதிவுகளை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் சுரேஷ் தனது முகநூல் பக்கத்தில், " உயிரை மாய்த்துக் கொள்வது எதுக்கும் முடிவல்ல மச்சி ... இவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தும் இந்த முடிவு எடுத்திருக்க கூடாதுடா... மர்ம தேசத்தில் குழந்தையாக தொடங்கிய உன் பயணம் இப்படி முடிந்திருக்க கூடாது 😢😢😢 பெரிய இயக்குநரா ஜெயிச்சிருக்க வேண்டியவன் நீ.. Miss you machi Lokesh Rajendran ... RIP" என பதிவிட்டுள்ளார்.
உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறை, தற்கொலை தடுப்பு தொடர்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.