நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னை வேட்பாளராக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல பொருப்பாளராக செயல்பட்டு வரும் கமீலா நாசர் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் நாசரின் தம்பி ஜவஹர், நாசர் மற்றும் கமீலா நாசர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கமீலா நாசருக்கு ஓட்டுப்போட வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் குடும்பம் சார்ந்த பிரச்சனைகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. கமிலா நாசருக்கு “ஓட்டுப் போட்டுவிடாதீர்கள் “ என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்கு பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் உள்ளனர்.
நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமிலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது. எங்கள் தரப்பி விளக்கத்தை அளிக்க என் 40 வருட வாழ்க்கை சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு இது நேரமல்ல. குடும்பத்திலே பலமான தடைகள் இருந்தும் எனது கடமைகளை நிறைவேற்றியிருக்கிறேன். பல விஷயங்கள் திரிக்கப்பட்டு, புனையப்பட்டு எங்கள் மீது சகதியாய் வீசப்பட்டுள்ளது.
தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணர்கிறேன். தேர்தல் முடிந்தபின், நானும் கமிலாவும் வேறு கிரகத்திற்கு பறந்தௌ சென்றுவிடப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மை உள்ளது. இப்போதைக்கு இவ்வளவே’ என நாசர் தெரிவித்துள்ளார்.