தூங்குவது, சாப்பிடுவது, நடப்பது ரிப்பீட்டு.. 190-வது பிறந்தநாளைக் கொண்டாடும் உலகின் வயதான ஆமை.. ஹாப்பி பெர்த்டே ஜொனாதன்!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: உலகின் வயதான ஜொனாதன் என்ற ஆமை தற்போது தன்னுடைய 190-வது பிறந்தநாளை கொண்டாட தயாராகும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

190-வது பிறந்தநாள்:
இங்கிலாந்து ராணி விக்டோரியா அவர்களின் பதின்பருவ காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறது ஜொனாதன் என்ற ஆமை. சுமார் 120 வருடங்களுக்கு முன்னரே ராணி விக்டோரியா மரணித்தாலும், இன்றும் ஜொனாதன் இன்னமும் செயின்ட் ஹெலினா தீவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த 2022ஆம் ஆண்டு தனது 190-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது. அதன்மூலம், இதுவரை வாழ்ந்த ஆமைகளில் மிகவும் வயதான ஆமை என்ற பெருமையையும் ஜொனாதன் ஆமைக்கு கிடைக்கவுள்ளது.
சரியான தகவல்கள் இல்லை:
சுமார் 1832-ஆம் ஆண்டு பிறந்ததாகக் கருதப்படும் ஜொனாதன், சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவர் 1882 ஆண்டு செயின்ட் ஹெலினாவுக்கு கவர்னராக பொறுப்பேற்றார். அவருடன் தான் இந்த ஜொனாதனும் செயின்ட் ஹெல்னாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறிய செயின்ட் ஹெலினாவில் சுற்றுலாத் தலைவர் மேட் ஜோஷுவா, 'ஜொனாதனுக்கு உண்மையில் 200 வயது கூட இருக்கலாம். ஜொனாதன் செயின்ட் ஹெலினா தீவுக்கு வந்ததைப் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. அதுமட்டுமில்லாமல் ஜொனாதன் எந்த ஆண்டு, எந்த தினத்தில் பிறந்தது என்பதற்கான பதிவும் இல்லை' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜொனாதனின் உலகில் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை:
தற்போது ஜொனாதனன் வாழ்ந்த காலம் உலகம் எவ்வாறெல்லாம் மாறியுள்ளது குறித்தான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில், ஜொனாதன் பிறந்ததிலிருந்து, உலகம் அளவிட முடியாத அளவில் மாறியுள்ளது. ஜொனாதன் பிறந்த பிறகுதான் உலகில் முதன்முதலில் புகைப்படம் 1838-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஒளிரும் விளக்கு 1878-இல் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் முதல்முதலாக 1903-இல் விண்ணில் பறந்தது, 1969-ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் முதலில் காலடி வைத்தார். இரண்டு உலகப் போர்களை உலகம் கண்டது என பல தகவல்களை பலர் இணையத்தில் அள்ளி தெறித்து வருகின்றனர். ஆனால், ஜொனாதனின் உலகில் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. தூங்குவது, சாப்பிடுவது, நடப்பது செய்வது இதைதான் ஜொனாதன் இத்தனை வருடங்களாக செய்து கொண்டிருக்கிறது.
வாசனை உணர்வு, கண் பார்வையை ஜொனாதன் இழந்துள்ளது:
மேலும், ஜொனாதன் ஆமை பராமரிப்பார்கள் ஜொனாதனனை குறித்து கூறும்போது, 'வயோதிகம் காரணமாக வாசனை உணர்வு, கண் பார்வையை ஜொனாதன் இழந்துள்ளது. பார்வை இழந்துள்ளதால் ஜொனாதனுக்கு உணவு கையில் வழங்கப்படுகிறது. ஜொனாதன் இன்னமும் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருக்கிறது. கேரட், கோஸ், ஆப்பிள், வெள்ளரி போன்றவை ஜொனாதன் விரும்பி உண்ணும் உணவுகள்' என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஜொனாதனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் செயின்ட் ஹெலினா தீவில் உள்ள அதிகாரிகள் பிரம்மாண்டமாக தயார் செய்து வருகின்றனர். மேலும், ஜொனாதனை பார்க்கவரும் அனைத்து நபர்களும் ஜொனாதனனின் கால்தடத்தின் படத்தை பெறுவார்கள் என செயின்ட் ஹெலினா தீவின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
