ஜப்பான் மீட்டிங்ல பிரதமர் மோடி பேசிட்டு இருந்தப்போ.. வானத்துல பறந்த 4 ஃபைட்டர் ஜெட் விமானங்கள்.. பரபரப்பான அதிகாரிகள்.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானில் நடைபெற்றுவரும் குவாட் மாநாட்டில் மோடி கலந்துகொண்ட நிலையில், ஜப்பான் வான்வெளியில் திடீரென 4 போர் விமானங்கள் பறந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குவாட் மாநாடு
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4-வது குவாட் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.
போர் விமானங்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில், ஜப்பானின் வான்பரப்பில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு சொந்தமான 4 போர் விமானங்கள் பறந்ததாக ஜப்பானிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபுயோ கிஷி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு சீன குண்டுவீச்சு விமானங்கள் இரண்டு ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களுடன் இணைந்து கிழக்கு சீனக் கடலுக்கு பறந்தன. அதன்பிறகு கிழக்கு சீன கடலில் இருந்து பசிபிக் நோக்கி அவை பறந்து சென்றன. இதனிடையே செவ்வாயன்று ஒரு ரஷ்ய உளவு விமானம் வடக்கு ஹொக்கைடோவிலிருந்து மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்திற்கு பறந்தது" என்றார்.
ஆலோசனை
இது சினமூட்டும் நிகழ்வு எனக் குறிப்பிட்ட கிஷி, உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பை வலுப்படுத்த மாநாட்டில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும், ரஷ்ய - உக்ரேன் போர் குறித்தும் அவற்றின் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த நவம்பரில் இருந்து ஜப்பான் வான்பரப்பில் சீன விமானங்கள் பறப்பது இது நான்காவது முறையாகும். குறிப்பாக குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சீனா மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்கள் ஜப்பான் வான் பரப்பில் பறந்தது, உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
