'இதை' மனசுல வச்சுக்கங்க.. ஆறு குழந்தைகளின் அப்பா எலான் மஸ்க் சொல்றத கேளுங்க!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் முதல் மூன்று இடத்திற்குள் வரும் அளவு சொத்து வைத்திருப்பவர் எலான் மஸ்க். வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டும் அவர் ஆசை இல்லை. புதுப் புது தொழில்நுட்பங்களை உருவாக்குவது, விண்வெளி சாகசங்கள் நிகழ்த்துவது என்று பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்பவர்.

அவரின் துணிச்சிலான பேச்சுகளுக்கும், வெளிப்படையான செயல்பாடுகளுக்கும் பலர் மஸ்க்கின் ரசிகர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில் உலகம் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் மிக முக்கியப் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் மஸ்க்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ- வான மஸ்க், சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது, ‘நம் மனித நாகரிகத்துக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிறப்பு விகிதம் என்று கருதுகிறேன். நம் உலகில் பிறப்பு விகிதமானது எதிர்பாராத அளவுக்கு மிகவும் குறைவாக சரிந்து வருகிறது. உலகில் போதுமான அளவுக்கு மனிதர்கள் இல்லை என்பது நம் மொத்த நாகரிகத்துக்கே இருக்கும் பிரச்சனையாகவே நான் கருதுகிறேன்.
உலகில் பலரும், குறிப்பாக பல அறிவாளிகளும் கூட அதிக மக்கள் தொகையால் நாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறார்கள். அது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால், உண்மை என்பது அதற்கு நேர்மாறாகத் தான் உள்ளது. வெறுமனே தற்போது இருக்கும் மக்கள் தொகையை மட்டும் வைத்து இப்படி நினைக்கிறார்கள்.
வரும் காலங்களில் மக்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் நம் நாகரிகத்துக்கே மிகப் பெரும் ஆபத்துக் காத்திருக்கிறது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க், கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கு திட்டம் போட்டு வருகிறார். குறிப்பாக அவர் இன்னும் ஐந்தரை ஆண்டுகளில் தான், மனிதர்களை மார்ஸுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்துவேன் என்று சவால் விட்டுள்ளார் மஸ்க்.
இதைக் குறிப்பிட்டு சில மாதங்களுக்கு முன்னர் மஸ்க் பதிவிட்ட ட்வீட் ஒன்றில், ‘மார்ஸ் கிரகத்தில் நிறைய மக்கள் தங்குவதற்கான சூழல் உள்ளது. அங்கு தற்போது மக்கள் தொகை பூஜ்ஜியம் தான். அங்கு நாம் குடியேறுவதற்கான தேவை உள்ளது. மார்ஸுக்கு உயிரூட்டுவோம்’ என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
