திமுக-வில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதுதான். ஒரு பக்கம் உதயநிதிக்கு நெருக்கமான அமைச்சர்கள் அன்பில் மகேஷ் போன்றவர்கள், ‘மொத்த தமிழ்நாடும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது’ என்று தொடர்ந்து ஆதரவுக் குரலில் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், ‘திமுகவில் வாரிசு அரசியல் மட்டும்தான் எடுபடும்’ என்று விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.
![udhayanidhi stalin gets angry over the questions from reporters udhayanidhi stalin gets angry over the questions from reporters](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/photo-udhayanidhi-stalin-gets-angry-over-the-questions-from-reporters.jpg)
2021 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட உதயநிதி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். வெற்றி பெற்றவுடன் தொகுதியை மறந்துவிடாமல், கொரோனா தொற்று அதிகரித்த நேரத்தில் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார். இதனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் பெருகியது.
அதே நேரத்தில் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால், தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருக்கிறார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான், பொங்கலையொட்டி, தன் தொகுதியில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசுகளை வழங்கியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் உதயநிதி. அந்த நேரத்தில், ‘உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா. சீக்கிரமே அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாமா?’ என்று கேட்கப்பட்டது. பதில் சொல்ல சில கணங்கள் எடுத்துக் கொண்ட உதயநிதி, ‘எனக்கு எதாவது பதவி கிடைக்குமா என்பதை மனதில் வைத்து நான் பணி செய்வதில்லை. கட்சித் தொண்டர்களுக்கு ஏற்றபடியும், தலைவர் சொல்வதுபடியும் எனது பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.
நான் சினிமா, அரசியல் என இரண்டிலும் எதையும் எதிர்பார்த்து வேலை செய்வது கிடையாது. என் வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் மட்டும்தான் எனது கவனம் இருக்கும். என்னால் முடிந்த வரையில் மக்களுக்குச் சேவை செய்வேன்’ என்ற சூசகமாக சொன்னார்.
தொடர்ந்து அவரிடம், ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உங்களுக்கும் வழி பிறக்குமா?’ என்று பூடகமாக கேட்கப்பட்டது.
இதற்கு சற்று உரத்தக் குரலில், ‘இப்போதே எனக்கு நல்ல வழிதானே இருக்கிறது. அதில் என்ன குறையைக் கண்டீர்கள்’ என்று உதயநிதி படாரென்று பதில் சொல்ல அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் பத்திரிகையாளர்கள் ஒரு சில நொடிகள் அமைதியாகிவிட்டார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)