சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடான இடஒதுக்கிடு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாத நிலையில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அதிமுகவுக்கும்-பாஜகவுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை கடந்து இந்த கூட்டணி நீடித்து வரும் வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 12 ஆயிரத்து 858 பணியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதிமுக - பாஜக
தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக- திமுக கூட்டணிகளுக்கு இடையே நேரடி போட்டி உள்ளது. பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அதிமுக - பாஜக இடையே இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நீடித்து வந்தது. முதலில் 35 சதவீத இடங்களை பாஜக கேட்டதாகவும், பிறகு 20 சதவீத இடங்களை கோரியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், அதிமுக அதிகபட்சமாக 8 சதவீத இடங்களை மட்டுமே தர முன்வந்ததாகக் கூறப்படுகிறது. முதல் இரண்டு சுற்று கூட்டத்தில், பாஜகதான் அதிமுகவை நம்பி இருக்கிறதே தவிர அதிமுக ஒன்றும் பாஜகவை நம்பி இல்லை என்பது போன்ற தொனியில் அதிமுக நிர்வாகிகளின் பேச்சுக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பாஜக அதிருப்தி
இதனையடுத்து, அதிமுகவுடனான இடப்பங்கீடு மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து பாஜக தேசிய தலைமைக்கு முழுமையான தகவலை, தமிழக பாஜக அனுப்பியது. கடந்த தேர்தலில் பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக அதிமுக தரப்பில் வாதம். சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனது என்றும் அதிமுக கருதுகிறது. அதே நேரத்தில் பாஜக தரப்பில் இருந்து வேலூர், நெல்லை, கோவை ஆகிய மாநகராட்சி பதவிகளை எதிர்பார்த்ததாகவும், அதற்கு வாய்ப்பே இல்லை என அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், 100 வார்டுகள் உள்ள கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளை பாஜக கேட்டதாகவும், அதில் 5 வார்டுகள் மட்டுமே அதிமுக வழங்க முன்வந்ததாகவும் தெரிகிறது. பாஜகவுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டது.
தனித்து போட்டி
அதிமுகவின் முடிவை பாஜக கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் கலக்கத்தில் இருந்தது. இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கரு நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் வி.பி துரைசாமி, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

மற்ற செய்திகள்
