5 நாளைக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும், அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.

இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் நவம்பர் 5 ஆம் தேதிவரையில் கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு காற்றின் தீவிரம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டும் அல்லாது காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | இந்தியா ஸ்கோர் என்ன?.. தவித்த பயணி.. விஷயம் கேள்விப்பட்டு விமானி கொடுத்த ரிப்ளை.. வைரல் Pic..!

மற்ற செய்திகள்
