‘9 மாசமா கணவரை காணோம்’.. கைதான மனைவி கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தகாத உறவை கண்டித்த கணவருக்கு மனைவியால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘இந்த மாதிரி நேரத்துல அவர் இல்லையே’.. கண்ணீர் விட்டு அழுத ஜாஸ் பட்லர்.. உருகும் ரசிகர்கள்..!
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 40). கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற ராஜசேகர் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. பல மாதங்களாக ராஜசேகர் குறித்த தகவல் தெரியாததால், விஜயலட்சுமியின் தம்பி சிவகுமார் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது ராஜசேகரை கொன்று வாழைத்தோப்பில் புதைத்து விட்டதாக கூறி விஜயலட்சுமி அதிர வைத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிவகுமார் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பண்ருட்டி சரக துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாழைத் தோட்டத்தை பார்வையிட்டனர். பின்னர், விஜயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அதில், கணவர் ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்றுள்ளார். இந்த சமயத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடன் விஜயலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை ராஜசேகர் கண்டித்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு, மோகனுடன் சேர்ந்து ராஜசேகரை கொன்று வாழைத் தோப்பில் சடலத்தை புதைத்தாக போலீசாரிடம் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராஜசேகர் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மோகனையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
