‘தோல்விக்கு காரணம் இதுதான்’.. 2 வீரர்களை மறைமுகமாக சாடிய கேப்டன் ஜடேஜா.. யாருன்னு தெரியுதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக இரண்டு வீரர்களை கேப்டன் ஜடேஜா மறைமுகமாக சாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ரன்களும், ஷிவம் துபே 49 ரன்களும், மொயீன் அலி 35 ரன்களும் அடித்தனர்.
இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் (40 ரன்கள்) மற்றும் குயிண்டன் டி காக் (61 ரன்கள்) முதல் விக்கெட்டிற்கு 99 ரன்களை குவித்தனர். இதன் பின்னர் வந்த எவின் லூயிஸ் 55 ரன்கள் மற்றும் ஆயுஸ் படோனி 19 ரன்கள் அடிக்க, 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து லக்னோ வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ஜடேஜா, ‘எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. ராபின் உத்தப்பா மற்றும் சிவம் துபே மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் பேட்டிங்கை போல் பீல்டிங்கில் எங்களால் சரியாக செயல்பட முடியவில்லை. மைதானத்தில் சிறிது நேரத்திலேயே அதிக பனிப்பொழிவு வரத்தொடங்கி விட்டது. அதனால் பந்து கையில் நிற்கவில்லை, நழுவிக்கொண்டே இருந்தது.
இனி ஈரமான பந்துடன் பவுலிங் செய்ய பயிற்சி எடுக்கவுள்ளோம். அதேவேளையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். கேட்ச்கள் தான் நமக்கு வெற்றி தரும். அந்தவகையில் 2 கேட்ச்கள் விடப்பட்டுள்ளன. அதுவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இனி அதில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம்’ என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த கூட்டணியை பிரிக்க சிஎஸ்கே அணி பல முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது பிராவோ வீசிய ஓவரில் டி காக் அடித்த பந்து மொயின் அலியின் கைக்கு நேராக கேட்ச் ஆனது. ஆனால் அதை அவர் பிடிக்க தவறிவிட்டார். அதேபோல் கே.எல்.ராகுல் கொடுத்த கேட்ச் ஒன்றை இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே தவறவிட்டார். முக்கியமான இரண்டு கேட்ச்களை தவறவிட்டது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இவர்கள் இருவரைதான் கேப்டன் ஜடேஜா மறைமுகமாக சாடியுள்ளார் என சொல்லப்படுகிறது.

மற்ற செய்திகள்
