போர்வெல்லில் சிக்கிய மகன்.. கதறிய பெற்றோர்..ராணுவ வீரர் செய்த காரியத்தால் நெகிழ்ந்துபோன மக்கள்..அமைச்சர் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோர்வெல்லில் சிக்கிய குழந்தையை காப்பாற்ற, ராணுவ வீரர் தாயாக மாறிய சம்பவம் பலரையும் உருக வைத்திருக்கிறது.

ராணுவத்தில் பணிபுரிவது எளிதான காரியம் இல்லை. எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு சேவை செய்வதையே கடமையாக கொண்டு பணியாற்றும் ராணுவ வீரர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் இந்த வீரர்கள், பொதுமக்களுக்கு ஓர் இடையூறு என்றால் உடனடியாக ஓடோடிச்சென்று உதவவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில், போர்வெல்லில் சிக்கிய குழந்தையை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ராணுவ வீரருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
மீட்பு
குஜராத் மாநிலம், திராங்காத்ரா தாலுகாவில் அமைந்துள்ளது துதாபூர் கிராமம். இங்கே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிவம் என்னும் 18 மாத குழந்தை தவறி விழுந்திருக்கிறது. இதனால் பெற்றோர் பதறிப்போன நிலையில், ராணுவ முகாமிற்கு இதுகுறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து, 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ராணுவ முகாமில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து துதாபூர் கிராமத்திற்கு வந்திருக்கிறது. இதனிடையே குழந்தை பத்திரமாக மீட்கப்படவே, அதனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளனர் ராணுவ வீரர்கள்.
தாயாக மாறிய ராணுவ வீரர்
இதனை தொடர்ந்து, குழந்தையை கையில் பிடித்தபடி ராணுவ வீரர் அமர்ந்திருக்க, துரிதமாக சென்ற ஆம்புலன்ஸ் திரங்காத்ரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறது. ஆம்புலன்சில் வரும்போது, தாயைப்போல, குழந்தையை அந்த ராணுவ வீரர் கையில் தாங்கியபடி உணவு ஊட்டியிருக்கிறார்.
அதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக மாவட்ட சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவம் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்க நேரத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க உதவிய ராணுவ அதிகாரிக்கு அந்த கிராம மக்களே நன்றி கூறியுள்ளனர்.
பாராட்டு
இதனிடையே, ஆழ்துளை கிணறில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்ற தாயாக மாறிய ராணுவ வீரரை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பாராட்டியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்," எமோஷனும் பணியும் ஒரே நேரத்தில் அமைந்திருக்கிறது. இந்திய ராணுவத்திற்கு சல்யூட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த ராணுவ வீரரின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | மெட்ரோவில் நிரம்பி வழிந்த கூட்டம்.. மனைவியுடன் செல்பி எடுக்க போராடிய கணவர்.. வைரலாகும் கியூட் வீடியோ..!
