இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பு விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 03, 2019 12:47 PM
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவரது நடிப்பில் 'டிராஃபிக் ராமசாமி' சமீபத்தில் வெளியாகியிருந்தது. விக்கி இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது கிரீன் சிக்னல் புரொடக்ஷன் சார்பில் தயாரித்திருந்தார். இந்த படம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீது மணிமாறன் என்பவர் அளித்துள்ள புகாருக்கு கிரீன் சிக்னல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் டிராபிக் ராமசாமி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை கனடா நாட்டை சேர்ந்த பிரமானந்த் சுப்ரமணியன் என்பவர் தமிழ் நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார்.
இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால் ஒப்பந்தபடி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியனால் தர முடியவில்லை. பட வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார். அதனால் வியாபாபரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினோம்.
அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர் சங்கமே முடிவு செய்வதால் படவெளியிட்டை தள்ளிவைக்க முடியாத நிலை. எந்த விநியோகிஸ்தரும் படத்தை வெளியிட முன் வராத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரனே வெளியிட்டு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இந்த படத்தை வாங்கவோ, வெளியிடவோ சம்பந்தமில்லாத மணிமாறன் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.
இதன் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகரின் புகழை கெடுக்கவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றியுள்ளார்கள். நடந்த உண்மைகளை ஆதராத்துடன் இன்று (அக்டோபர் 3) கமிஷனரை சந்தித்து புகார் கொடுக்கவுள்ளார். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.