www.garudabazaar.com

இயக்குனர் பாலா சொன்ன கதை.. திகைத்து போன பாடலாசிரியர் வைரமுத்து..! வைரல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து இணைந்துள்ளார்.

Director Bala meet lyricist vairamuthu and narrated a story

இயக்குனர் பாலாவும் சூர்யாவும் நந்தா & பிதாமகன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து 'வணங்கான்' படத்தில் பணிபுரிவதறகான அறிவிப்பு கடந்தாண்டு  வெளியானது. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இப்படத்திற்கு தமிழில் வணங்கான் என பெயரிடப்பட்டது. தெலுங்கில் 'அச்சாலுடு' என பெயரிடப்பட்டது.

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள, ஜி. வி. பிரகாஷ் இசையில், கலை இயக்குனராக மாயப்பாண்டியும், எடிட்டராக  சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் இப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

.

சில மாதங்களுக்கு முன் இயக்குனர் பாலா ஒரு அறிக்கையை வெளியிட்டு,  " என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக  முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்'-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்.." என இயக்குனர் பாலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா & 2டி நிறுவனம் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறியது.

இது தொடர்பாக சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்." என அறிக்கையில் கூறப்பட்டது.

சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சண்டைக் காட்சி இயக்குனர் சில்வா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். இருப்பினும் படக்குழு சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து தமது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாலாவுடனான சந்திப்புக்கு பிறகு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு

கதைசொன்னாய்; இதிலும் வெல்வாய்.

உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் கைவிடாது கலை. ஐந்து பாட்டிலும் ஐந்தமிழுக்கு வழிவைத்தாய். தீராத கங்குகளால் பழுத்துக் கிடக்கிறது என் பட்டறை. தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன்; போய் வா!" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Bala meet lyricist vairamuthu and narrated a story

People looking for online information on Bala, Vairamuthu will find this news story useful.