"இனி டீ வேண்டாம்.. இதை குடிங்க மக்களே"..பொருளாதார சிக்கலை தீர்க்க பாகிஸ்தான் அரசு எடுத்த புதுமையான முடிவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் அரசு பொருளாதார சிக்கல்களால் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் பானங்களான லஸ்ஸி சட்டு (Sattu) வை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களை அந்நாட்டு உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெற்றதை தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அங்கே, பொருளாதார நெருக்கடிகள் சீராகவில்லை. இதன் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது.
டீ வேண்டாம்
உலகில் அதிகம் தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். 501 மில்லியன் யூரோக்களுக்கு தேயிலையை இறக்குமதி செய்கிறது பாகிஸ்தான். கைவசம் இருக்கும் அந்நிய செலாவணி குறைந்துள்ளதால் பொதுமக்கள் தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டு அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசியிருந்த பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஷன் இக்பால்," பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ளவேண்டும். இதனால் அரசுக்கு இறக்குமதி செலவு குறையும். பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு கடன் வாங்கித்தான் டீ தூளை இறக்குமதி செய்கிறது. இதனால் நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவில் ஒன்று அல்லது இரண்டு கோப்பைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்'' என பொதுமக்களை வலியுறுத்தியிருந்தார். இது சமூக வலை தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
லஸ்ஸி மற்றும் சட்டு
இந்நிலையில், பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம் பொருளாதார சிக்கலை தீர்க்கும் விதமாக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உள்ளூர் பானங்களான லஸ்ஸி மற்றும் சட்டு-வை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க புதிய வழிகளை கண்டறியுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்," நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கையானது வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வருமானத்தையும் அளிக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மக்களிடம் பிரபலப்படுத்த தேவையான நடவடிக்கைள் குறித்து ஆராயுமாறு பல்கலைக்கழக துணை வேந்தர்களை உயர்கல்வி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
