ஜகார்த்தாவில் பாதி கடலில் மூழ்கியதால்... தலைநகரை மாற்ற ரெடியாகும் இந்தோனேஷியா!
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | Apr 30, 2019 03:04 PM
இந்தோனீசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ராஜ்ஜநெகோரோ தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகில் அதிவேகமாக கடலில் மூழ்கிவரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், வடக்கு ஜகார்த்தா பகுதி கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு அடி மூழ்கியுள்ளதாகவும், தொடர்ந்து மூழ்கிவருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், 13 ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிற கடற்கரை நகரமான ஜகார்த்தாவின் பெரும் பகுதிகள் 2050ம் ஆண்டில் கடலில் மூழ்கிவிடும் என்று அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், இந்த நகரம் கடும் போக்குவரத்து நெரிசலையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் குறித்த நேரத்தில், குறித்த நிகழ்வுக்கு செல்லவேண்டும் என்றால், போலீசார் கடுமையாக போராடி போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இந்த நாடு டச்சு காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற 1945 முதலே தலைநகரை மாற்றுவது குறித்த பேச்சும் இருந்து வருவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசியா அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஜகார்த்தாவில் உள்ள தலைநகரை ஜாவா தீவில் உள்ள வேறு ஒரு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
