'82 அடி' உயர கம்பத்தில்... 'ஒரு ஆள்' மட்டுமே உட்காரக் கூடிய பேரலில்... '78 நாட்கள்' தன்னந்தனியாக... மலைக்க வைக்கும் 'கின்னஸ் சாதனை'...
முகப்பு > செய்திகள் > உலகம்82 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்ட பேரல் ஒன்றில் தொடர்ந்து 78 நாட்கள் தன்னந்தனியாக தங்கியிருந்து வெர்னன் க்ரூக்கர் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வெர்னன் க்ரூக்கர் என்பவர் உயரமான கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட பேரலில் தன்னந்தனியாக தங்கியிருந்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடுபவர் ஆவார். இவர் கடந்த 1997ஆம் ஆண்டு 25 மீட்டர் உயர இரும்பு கம்பத்தில் பொருத்தப்பட்ட ஒரு ஆள் மட்டுமே உட்காரக்கூடிய அளவிலான பேரலில் தன்னந்தனியாக 67 நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது 82 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்ட பேரல் ஒன்றில் 78 நாட்கள் தன்னந்தனியாக தங்கியிருந்து தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இவரது இந்த முயற்சிக்காக 82 அடி உயர கம்பத்தின் உச்சியில் சுமார் 132 காலன் கொள்ளளவு உடைய பேரல் ஒன்று பொருத்தப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் மேலே சென்ற வெர்னன் க்ரூகர் 78 நாட்கள் 23 மணி மற்றும் 14 நிமிடங்கள் மேலே தங்கியிருந்துள்ளார். இதையடுத்து நேற்று அவர் கீழே இறங்கினார்.
தனது சாதனை குறித்து குறிப்பிட்ட வெர்னன், பொறுமையை வெகுவாக சோதிக்கும் இந்த முயற்சியை வேறு யாரும் முறியடிப்பது கடினம் எனக் கூறினார். தனது சொந்த சாதனையை தான் மீண்டும் முயற்சித்து பார்க்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார். இந்த சாதனை முயற்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதியை வலிப்பு நோய் மையம் மற்றும் பெல்ஃபாஸ்ட் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.
