"மறைந்த யானை லட்சுமிக்கு சிலை".. "அதன் தந்தம் நினைவுப் பொருளாக".. சுற்றுலா அமைச்சர் அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை மரணமடைந்தது.

பிரபலமான புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்த போது தனியார் நிறுவனம் மூலம் ஐந்து வயதான லட்சுமி என்ற பெண் யானை விநாயகர் கோயிலுக்கு அளிக்கப்பட்டது.
மணக்குள விநாயகர் கோயில் வளாகத்திலேயே லட்சுமி யானை ஓய்வெடுத்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் இந்த லட்சுமி யானை 48 நாள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை நடைப்பயிற்சியின் போது கல்வே கல்லூரி அருகே சென்ற போது மயங்கி விழுந்த யானை அங்கேயே உயிரிழந்தது என கூறப்படுகிறது.
யானையின் மரணத்தால் மணக்குள விநாயகர் கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது. யானையின் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானையின் உடல் வனத்துறைதக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த லட்சுமி யானைக்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், "யானை லட்சுமிக்கு கல்லறை அமைத்து, கற்சிலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். லட்சுமி யானையின் தந்தம் கேரளாவில் உள்ள கோயில்களில் பராமரிப்பு செய்வது போல் அலங்கரிக்கப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலிலேயே வைக்கப்படும்" என்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.
லட்சுமி யானையின் தந்தம் தற்போது வனத்துறை வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
