சிறார் ஆபாச வீடியோ பகிர்ந்த மேலும் ஒருவர் கைது... தமிழ்நாடு போலீஸ் அதிரடி... திருச்சியைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் தொடரும் வேட்டை...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 04, 2020 08:25 PM
பொள்ளாச்சியில் சிறார் ஆபாச வீடியோவை முகநூலில் பதிவிட்டதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறார் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசும் இதுதொடர்பாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனையடுத்து, சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ், என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 15 பேர் விசாரிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவரை போலீசார் இன்று பொள்ளாச்சியில் கைது செய்துள்ளனர். அவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் சிறார் ஆபாச வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் ரெண்டா பாசு மாடரியை கைது செய்தனர்.
