காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு.. ரோஹித்தின் தீயான பேட்டிங்.. மிரண்டுபோன கிரிக்கெட் உலகம்.. வைரல் ட்வீட்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Dec 07, 2022 10:06 PM

வங்கதேச கிரிக்கெட் அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கையில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் பேட்டிங் செய்தது பலரையும் நெகிழ செய்திருக்கிறது. இந்நிலையில், சக வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் ரோஹித்தை பாராட்டி வருகின்றனர்.

Rohit sharma rocking 50 against Bangladesh wishes pour in Twitter

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் 50 ஓவர் முடிவில்7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிர்ச்சி கொடுத்தபோதிலும் அந்த அணியின் மஹ்மத்துல்லா மற்றும் மெஹிதி ஹசன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹசன் சதமடித்து அசத்தினார். இந்திய அணியின் பவுலர்களை பொறுத்தவரையில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரை அனமுல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்து அவருடைய பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது. அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கிச் சென்றது. அதனை கேட்ச் எடுக்க ரோஹித் முயற்சிக்க, பந்து அவரது கையில் பட்டு நழுவியது. இதனால் காயமடைந்த ரோஹித் கைகளை உதறியபடி அங்கிருந்து வெளியேறினார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. ரோஹித் காயம் காரணமாக வெளியேறியதால் கோலி ஓப்பனிங்கில் ஆடினார். இருப்பினும் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில் பேட்டிங் செய்ய ரோஹித் உள்ளே வந்தார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ந்து போயினர்.

காயத்துடன் வந்த ரோஹித் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். இருப்பினும் கடைசி ஓவரில் மேட்ச் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்து டாட் பாலானது. இதனால் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இருப்பினும் 28 பந்துகளை சந்தித்த ரோஹித், 51 ரன்களை (3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) குவித்தது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழத்தினார். காயம் காரணமாக மருத்துவமனை சென்று திரும்பிய ரோஹித் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் தவித்தபோது அதிரடியாக பேட்டிங் செய்தது கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ செய்திருக்கிறது.

 

இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில்,"மகத்தான மரியாதை ப்ரோ (Massive Respect bro)" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,"பெரும்பாலான நாட்களில் அவர் தொடக்க ஆட்டக்காரர். ஆனால் நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் போது ஒரு போராளி" எனவும் "இது நீண்ட நாட்களுக்கு பேசப்படும் தருணமாக இருக்கப்போகிறது. மிகவும் சிறப்பாக விளையாடினீர்கள் சாம்பியன்" என மும்பை இந்தியன்ஸ் அணியும் ரோஹித் ஷர்மாவை பாராட்டியிருக்கிறது. அதேபோல கொல்கத்தா அணி தனது ட்விட்டர் பக்கத்தில்,"காயம் ஹிட்மேனை தடுத்து நிறுத்திவிட முடியாது" என ரோஹித் ஷர்மாவை கௌரவித்திருக்கிறது. இதனிடையே இந்த ட்வீட்கள் வைரலாகி வருகின்றன.

 

 

Tags : #ROHIT SHARMA #HITMAN #CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit sharma rocking 50 against Bangladesh wishes pour in Twitter | Sports News.