'9 பேர் அடிச்ச மொத்த ரன் 19’..‘அந்த ரெண்டு பேர் மட்டும் இல்லனா ஹைதராபாத் அதோ கதிதான்’.. கதறவிட்ட டெல்லி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 15, 2019 12:03 AM

டெல்லி அணி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹைதராபாத் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

IPL 2019: Delhi Capitals won by 39 runs

ஐபிஎல் டி20 லீக்கின் 30 -வது போட்டி இன்று(14.04.2019) ஹைதராபாத்தில்  உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணியை மீண்டும் வில்லியம்சன் கேப்டனாக இருந்து வழி நடத்துகிறார்.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய பிரீத்வி ஷா(4) மற்றும் ஷிகர் தவான்(7) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கொலின் முன்ரோ கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதில் கொலின் முன்ரோ 40 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர்  45 ரன்களும் அடித்தனர். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடினர். இதில் வார்னர் 51 ரன்களும், பேர்ஸ்டோ 41 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

Tags : #IPL #IPL2019 #VIVOIPL #SRHVSDC