ஏன் 2011 உலகக்கோப்பைல யுவராஜுக்கு முன்னாடி தோனி களமிறங்கினாரு..? பல வருச கேள்விக்கு விடை கிடைச்சிருச்சு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன்பாக தோனி களமிறங்கியதற்கான காரணத்தை பல ஆண்டுகள் கழித்து இந்திய அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பேடி அப்டோன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. மும்பை மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது சச்சின், சேவாக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அப்போது களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். திடீரென விராட் கோலியும் அவுட்டானார். இதனை அடுத்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் தோனி பேட்டுடன் மைதானத்துக்குள் நுழைந்தார்.
கௌவுதம் கம்பீருடன் கூட்டணி அமைத்த தோனி சிறப்பாக விளையாடினார். அதில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது கௌதம் கம்பீர் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங்குடன் தோனி ஜோடி சேர்ந்தார். அப்போட்டியில் 91 ரன்கள் அடித்த தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்த சூழலில் யுவராஜ் சிங்கிற்கு முன்பாக ஏன் தோனி களமிறங்கினார் என்று அப்போது பல கேள்விகள் எழுந்தன. ஏனென்றால் அந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் யுவராஜ் சிங் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் தோனி எந்த ஒரு போட்டியிலும் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து அப்போது இந்திய அணியின் மனநல ஆலோசகராக இருந்த பேடி அப்டோன் தகவல் தெரிவித்துள்ளார். அதில், ‘இறுதிப்போட்டிக்கு முன்பு 8 போட்டிகளில் விளையாடிய தோனி பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் யுவராஜ் சிங் அந்த தொடர் முழுக்க சிறப்பாக விளையாடினார். ஆனால் பினிஷிங் செய்வதற்கு ஏற்றாற்போல ஒரு தருணம் தோனிக்காக உருவானது. இந்த உலகிலேயே ஒரு சில வீரர்களால் மட்டும்தான் மிகவும் அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்கி விளையாட முடியும். அந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் இல்லை. ஆனால் தோனி இருக்கிறார்’ பேடி அப்டோன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
